2 தொகுதியை அதிமுக ஒதுக்கியதால் தேர்தலில் போட்டியில்லை: நடிகர் கார்த்திக் பேட்டி

சென்னை: நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வருகிற சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே நாங்கள் இருக்கும் அதிமுக கூட்டணி கட்சியிலேயே ெதாடர்கிறோம். எங்களுக்கு 2 சீட் தருவதாக சொன்னார்கள். ஆனால் அதை வைத்துக் கொண்டு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதால் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதற்கு பதிலாக மக்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.

அதை செய்து ெகாடுக்கும்படி கேட்டிருக்கிறோம். அந்த கோரிக்கைகள் எங்களது தேர்தல் அறிக்கையில் விரிவாக வெளியிடப்படும். மக்களின் உரிமை குரலை எழுப்ப சட்டமன்றத்தை விட பாராளுமன்றம் சக்தி வாய்ந்தது. அதனால் நான் ராஜ்யசபா எம்.பி. ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றி இப்போது விரிவாக பேச முடியாது. தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து எங்கள் ஆதரவை முறைப்படி தெரிவித்து விட்டேன். என்னால் எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் சென்று தேர்தல் பிரசாரம் செய்வேன்.

கூட்டணியில் இணைவதற்காகவும், பிரசாரம் செய்வதற்காகவும் எந்த பணமும் பெறவில்லை. பெறவும் மாட்டேன். பா.ஜவில் சேர அழைப்பு வந்தது உண்மை. ஆனால் நான் தனி கட்சி நடத்துகிறேன். அதற்கென்று தனி கொள்கை இருக்கிறது. அதனால் பாஜவில் சேரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: