பாதுகாப்பு கேட்டு சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ எஸ்பி, கலெக்டரிடம் மனு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ, பாதுகாப்பு கேட்டு கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் மீண்டும் போட்டியிட, தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், தனது ஆதரவாளர்களுடன் கொல்லிமலையில் ஆர்ப்பாட்டம் செய்து, மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என கட்சி தலைமைக்கு 3 நாள் கெடு விதித்தார். ஆனால், அதிமுக தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்த சந்திரசேகரன் எம்எல்ஏ, சின்னகாரவள்ளியில் தேர்தல் அலுவலகம் திறந்தார். இந்த நிலையில், நேற்று மாலை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் எஸ்பி சக்திகணேசன் ஆகியோரை நேரில் சந்தித்து, அவர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

இன்று (18ம்தேதி) காலை 11 மணிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்கின்றேன். இதனை தடுக்க சிலர் இடையூறு செய்ய நேரிடும். வழிமறித்து பிரச்னை செய்ய கூடும். இது மலைவாழ் மக்கள் தொகுதி என்பதால், நானும் அதே இனத்தைச் சார்ந்ததால். ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்யும் நேரத்திலும், மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் நேரத்திலும், எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: