கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து விருகம்பாக்கம் தொகுதியை தூய்மையாக மாற்ற நடவடிக்கை: திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா போட்டியிடுகிறார். இவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மகன் ஆவர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகர் ராஜா தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேற்று சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவர் வெற்றி பெற கே.எஸ்.அழகிரி ஆசி வழங்கினார். சந்திப்பின் போது பகுதி செயலாளர் கண்ணன், தொண்டர் அணி அமைப்பாளர் சசி, பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பிரபாகர் ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுப வீரபாண்டியன், பொன்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் பிரபாகர்ராஜா அளித்த பேட்டி:

இளைய சமுதாயம் எந்தவிதத்திலும் தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக நவீன உடற்பயிற்சிக்கூடம் விருகம்பாக்கம் தொகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகள் தனியார் பளளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி தரப்படும். அரசு பள்ளியில் மாணவர்கள் சேரும் வகையில் நவீனப்படுத்தப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக தெருக்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பூங்காங்களின் தரம் உயர்த்தப்படும். பூங்காக்கள் இல்லாத இடங்களில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மையான தொகுதியாக விருகம்பாக்கம் தொகுதி மாற்றப்படும். குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: