ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்கள்: இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மேலும் ஒரு சாதனை..!

டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்து, உலகளவில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி, லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 266 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 26 ரன்களை எட்டியபோது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7000 ரன்களை குவித்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.

மிதாலி ராஜ் தற்போது 216-வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். கடந்த 3-வது ஒருநாள் போட்டியின்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும், உலகளவில் முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் மிதாலி ராஜ் பெற்றார். கடந்த 1999-ம் ஆண்டு, கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ், ஒருநாள் போட்டியில் முதல்முறையாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றிருந்தார். இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டே எட்வர்ட்ஸ் 5,992 ரன்கள் சேர்த்த நிலையில் ஓய்வு பெற்றார். தற்போது, அவரின் சாதனையை மிதாலி முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: