சேலம்: உரிய ஆவணங்கள் இன்றி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்பட்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது வாகனத்தில் 36 கோடி மதிப்பிலான 234 கிலோ தங்க ஆபரணங்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தனியார் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக தங்க ஆபரணங்கள் மொத்தமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு பொது மையத்தில் ஆபரணங்கள் வைக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு ஆபரணங்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் சொல்லப்பட்டது.