பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிமேகலை வினோத் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது அவர் பேசிக் கொண்டிருந்தபோது, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பெயரை குறிப்பிட்டு வாக்களிக்குமாறு கூறும்போது, வேட்பாளர் பெயரை மறந்து விட்டார். பின்னர் சில விநாடிகள் யோசித்து பார்த்த அவர் எதிரே தொண்டர்கள் வைத்திருந்த பதாகையில் இருந்த வேட்பாளரின் பெயரைப் பார்த்து கூறி வாக்கு சேகரித்தார். மேலும் பிரசார வாகனம் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் சீமான் காத்திருந்திருந்தார். எதிர்பார்த்த கூட்டமும் சேரவில்லை. மைக்கும் சரியாக செயல்படவில்லை. இதனால் 2 முறை மைக்குகள் மாற்றப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த சீமான், 9 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.