`எவ்வித அழுத்தமும் இல்லாமல் அசால்ட்டாக ஆடுகிறார்’: வாஷிங்டன் சுந்தர் அற்புதமான வீரர்...இங்கி. மாஜி வீரர் பாராட்டு

அகமதாபாத்:அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பன்ட் சதமடித்து  அசத்தினார். அதேபோல அஸ்வின், அக்‌ஷர்படேல் பந்துவீச்சு துறையில் ஆதிக்கம் செலுத்தினர். இவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், 8வது வரிசையில் களமிறங்கி 96 ரன்கள் குவித்த வாஷிங்டன் சுந்தர் குறித்து யாரும்  அவ்வளவாகப் பாராட்டி பேசவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்து வருகிறார்கள்.

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் கூறியிருப்பதாவது:- “வாஷிங்டன் சுந்தர் அற்புதமான வீரர். அவர் 8வது வரிசையில் களமிறங்கி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொண்ட விதம் என்னைக் கவர்ந்துவிட்டது. குறிப்பாக, ஆண்டர்சன் பந்துவீச்சில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அவர்  ஆடிய விதம் அற்புதம். மேலும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அப்போது வாஷிங்டன் சுந்தர் கடைசி வரிசையில் களமிறங்கி மூன்று அரை சதம் விளாசினார். இப்படிச்  சிறப்பான முறையில் பேட்டிங் செய்யும் ஒருவரை இனிமேலாவது கடைசி வரிசையில் களமிறக்காமல் முன்கூட்டியே களமிறக்க பிசிசிஐ முயற்சி செய்யவேண்டும்.

வாஷிங்டன் சுந்தரை நடுவரிசை அல்லது அதற்குமுன் களமிறக்க வேண்டும். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு அவரால் உதவமுடியும். அவருடைய ஷாட்களில் குறை இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை. ஸ்ட்ரைட்  பேட்டை சரியாகப் பயன்படுத்துகிறார். லென்த் பந்துகளை தயக்கமில்லாமல் எதிர்கொள்கிறார். கால்களைச் சரியாக நகர்த்தத் தெரிந்திருக்கிறது. அவருக்கு 21 வயதுதான் ஆகிறது. அதிக டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் பங்கேற்கவில்லை.  ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக, அவ்வளவுதான். முன்னனுபவங்கள் அவ்வளவாக இல்லாமல் எவ்வித அழுத்தமும் இன்றி அவர் பந்துகளை எதிர்கொள்வது வியக்க வைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: