ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாட்டில் முக்கிய இடத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அங்குள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்ற போலீசார் காவி சால்வையை அகற்றினர். பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவித்தது ஒரு பெண் என்பது தெரிந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

உண்மையிலேயே அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு களமிறக்கப்பட்டவரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிக்கப்பட்ட செய்தி பரவியதை அடுத்து ஒரத்தநாடு சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: