இந்தூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தியது. எமரால்டு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய விதர்பா அணி 41 ஓவரில் 150 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அக்ஷய் வாத்கர் 31, சஞ்சய் ரகுநாத் 28, ஹர்ஷ் துபே 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தமிழக பந்துவீச்சில் பாபா அபராஜித், கவுசிக், முகமது தலா 3 விக்கெட், சிலம்பரசன் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஆட்டத்தை விரைவாக முடித்து மொத்த ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியாக ஜெகதீசனுடன் இணைந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் இன்னிங்சை தொடங்கினார்.