புதுடெல்லி: நதிகள் இணைப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளை பற்றி விவாதிப்பதற்காக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல கவுன்சிலின் கூட்டம், மார்ச் 4ம் தேதி திருப்பதியில் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பற்றி விவாதித்து தீர்வு காண்பதற்காக, ‘தென்மண்டல கவுன்சில்’ என்ற அமைப்பு உள்ளது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்தும் நிரந்தர உறுப்பினர்களாகவும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் உள்ளன. இந்நிலையில், இந்த கவுன்சிலின் 29வது கூட்டம், திருப்பதியில் மார்ச் 4ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ளது. இதில், இந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.