வளம்பக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி : தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா வளம்பக்குடியில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு வழக்கமாக திறக்கப்படும் அரசு நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையம் திறக்கப்படும் இடத்தில் குவியல், குவியலாக கொட்டி இரவு, பகலாக காத்திருக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் கூறுகையில், நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என பூதலூர் தாசில்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் கடந்த 19ம் தேதி பார்வையிட்டு சென்றார். ஆனால் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வில்லை. இது குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மேலாளருக்கும் தகவல் கொடுத்துள்ளோம். எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்றனர்.

Related Stories: