விளக்கம் கேட்டுள்ளேன்: ஆளுநர் தமிழிசை வரலாற்று பிழை செய்துள்ளார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு.!!!

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வரலாற்று பிழை செய்துள்ளார் என முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். புதுவையில் 2016 சட்டமன்ற  தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் திமுக ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார். அவரது  அரசுக்கு காங்கிரஸ்-15, திமுக-3, சுயேட்சை-1 என மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.

எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக)-3 என மொத்தம் 14 பேர் உள்ளனர். இதனிடையே கட்சித் தாவல்  தடை சட்டத்தின்கீழ் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு பதவி பறிக்கப்பட்டது. மேலும் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி  கிருஷ்ணாராவ் மற்றும் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில்  மொத்த உறுப்பினர்களின் பலம் 28 ஆக குறைந்தது.

இருதரப்பும் சம பலத்தில் உள்ள நிலையில், காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக ரங்கசாமி  ஆளுநர் செயலாளரிடம் முதல்வர் நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர். இதற்கிடையே, புதுச்சேரி  ஆளுநராக நேற்று தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றதை தொடர்ந்து, எதிர்கட்சி மற்றும் ஆளும்கட்சியினர் சந்தித்து பேசினர். இதனையடுத்து, வரும்  22-ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டபேரவையை கூட்டி முதல்வர் நாராயணசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை  உத்தரவிட்டார்.

இந்நிலையில், சட்டமன்றத்தை கூட்டுவது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வரலாற்று  பிழை செய்துள்ளதாக குற்றச்சாட்டினார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் நியமன உறுப்பினர்கள் பாஜக என்று குறிப்பிட்டுள்ளார்.  நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் ஏற்கனவே அங்கீகரிக்கவில்லை. எனவே, ரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில்  மிகப்பெரிய தவறு உள்ளது. நியமன உறுப்பினர் விவகாரம் குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அனைத்து கட்சி கூட்ட முடிவுகளை 21-ம் தேதி  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: