புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்று, திமுக மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நமச்சிவாயம் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக நாராயணசாமி முதல்வரானார். தொடர்ந்து நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார். இது நமச்சிவாயத்துக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இருவருக்கும் இடையிலான உறவு ஆரம்பம் முதலே உரசலாக இருந்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியும் நமச்சிவாயத்திடமிருந்து பறிக்கப்பட்டதால், முதல்வர் மீது கடும் கோபமடைந்தார்.இதனை உன்னிப்பாக கவனித்து வந்த பாஜ. ஆளும் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள நமச்சிவாயத்தை தங்கள் கட்சியில் சேர்க்கும் யுக்திகளை கையாண்டது. இறுதியாக நமச்சிவாயத்தையும் மற்றொரு எம்எல்ஏ தீப்பாய்ந்தானையும் பாஜ தங்கள் வசம் இழுத்தது. இருவரும் பதவியை ராஜினாமா செய்து பாஜவில் ஐக்கியமாகினர்.