திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: அரசு மருத்துவமனை வளாகத்தில் 72 வயது மூதாட்டி பலாத்காரம்: தலையில் கல்லை போட்டு தப்பிய வாலிபருக்கு வலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி கிருஷ்ணவேணி (72), நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், தலையில் ரத்த காயத்துடன் அலறி கூச்சலிட்டார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  அப்போது, உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஆபத்தான் நிலையில் இருந்த கிருஷ்ணவேணியை மீட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் கிருஷ்ணவேணியை மருத்துவமனைக்கு அழைத்து வருவதும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அவர் மட்டும் தனியாக வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது. முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணவேணி இரவில் தூக்கம் வராததால் டீ குடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த வாலிபர், கிருஷ்ணவேணியிடம் நைசாக பேசி, மருத்துவமனைக்குள் அழைத்து வந்து பலாத்காரம் செய்துள்ளார். அவர் கூச்சலிட்டதால், அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் கல்லை போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories: