தனியார் மதுபாரில் தகராறு பெண் செய்தி வாசிப்பாளரை தாக்கிய பவுன்சர் கைது

சென்னை: விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியா (21), செய்தி வாசிப்பாளர். கேரளாவை சேர்ந்த இவர், தனது சகோதரி ஆதிரா (26) மற்றும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நண்பர்களான சிலம்பு, ஜெகன், கீர்த்தனா ஆகியோருடன் நந்தனம் பகுதியில் உள்ள ஒரு மது பாருக்கு கடந்த 27ம் தேதி இரவு 11 மணிக்கு சென்றுள்ளார். அப்போது பாரின் நுழைவாயிலில் இருந்த பவுன்சர்கள், இரவு 11 மணியுடன் முடிந்துவிட்டது, யாரையும் உள்ளே அனுப்ப முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால், பவுன்சர்களுக்கும் பிரியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பவுன்சரான வில்லிவாக்கம் ராஜமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த யோகேஷ் (25), பிரியாவை, ஆபாசமாக பேசி கன்னத்தில் தாக்கி உள்ளார். இதில் அவருக்கு இடது காதில் காயம் ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற செய்தனர்.

இதுபற்றி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பிரியா நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்படி போலீசார் பவுன்சர் யோகேஷை பிடித்து விசாரித்தனர். இதில் பிரியா பவுன்சர் யோகேஷின் நண்பரான அஜித்தை காதலித்துள்ளார். பிறகு அவரை பிரிந்து வேறு நபர்களுடன் மது பாருக்கு வந்ததால், காழ்ப்புணர்ச்சி காரணமாக தடுத்து நிறுத்தி நண்பனின் காதல் தொடர்பாக கேட்டதில் ஏற்பட்ட தகராறில் தாக்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார் பவுன்சர் யோகேஷ் மீது ஐபிசி 294(பி), 323, 341, 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post தனியார் மதுபாரில் தகராறு பெண் செய்தி வாசிப்பாளரை தாக்கிய பவுன்சர் கைது appeared first on Dinakaran.

Related Stories: