அலகாபாத் ராணுவ பயிற்சி மையத்தில் ராமநாதபுரம் வீரர் பழனிக்கு சிலை

அலகாபாத்; அலகாபாத் ராணுவ மையத்தில் ராமநாதபுரம் வீரர் பழனிக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லையில போரிட்டு வீர மரணமடைந்த ராமநாதபுரம் மாவட்ட ராணுவ வீரர் பழனிக்கு, அவர் வேலை பார்த்து வந்த அலகாபாத் ராணுவ மையத்தில் நினைவில்லம் மற்றும் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி, லடாக் எல்லை பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலுார் ராணுவ ஹவில்தார் பழனி (40) வீர மரணமடைந்தார். இதனால் இரு நாட்டுக்கு இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி, குடியரசு தின விழாவையொட்டி நாட்டுக்காக வீர மரணமடைந்த பழனிக்கு, ராணுவத்தின் உயரிய வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. மேலும், ராணுவ வீரர் பழனி அலகாபாத் ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றியதால், அங்குள்ள ராணுவ மையத்தில் ஒரு கட்டிடத்துக்கு ஹவில்தார் வீர் கே.பழனி அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், அதன் நுழைவாயிலில் மார்பளவு பழனியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. பழனி சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் மட்டுமின்றி பீரங்கி இயக்குவதில் வல்லவர்.

அவர் லடாக்கில் இருந்தபோது, கடந்த மே மாதம் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பெற்றதை நினைவு கூறும் வகையில் புகைபடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அரங்கம் மற்றும் சிலையை நேற்று மையத்தின் மேஜர் ஜெனரல் ரவீந்திர சிங் திறந்து வைத்தார்.

Related Stories: