முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (27). வெல்டராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் சில தினங்களுக்கு முன் மனைவியின் ஆதார்கார்டு எண் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகளை அவரிடமிருந்து மீட்டு தரவேண்டும் என பெற்றோர் ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பிரசாத்தின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.