கொரோனா தடுப்பூசியால் முன்களப்பணியாளர் பலியா? அவசர வழக்காக விசாரிக்க முறையீடு

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘தூத்துக்குடி மாவட்டம், புதூர் பேரூராட்சியில் மனோகரன் என்பவர் கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளராக பணியாற்றினார். இவர், திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவரது உடலை மருத்துவ நிபுணர் குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், அவர் எதனால் இறந்தார் என்பதை கண்டறியவும் உத்தரவிடக் கோரி மனு செய்கிறோம். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் நாளைக்கு (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினர். இதையடுத்து மனு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: