தருமபுரி : ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தனது ஆதரவு இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையானார். சசிகலா விடுதலையையொட்டி அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. சசிகலா அரசியலுக்கு வரவேண்டும். அது தவறில்லை என்பது என்னுடைய கருத்து.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்தவர் சசிகலா என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வர் ஆகவில்லை; அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தெரிவித்த அவர், தேர்தலுக்கு நேரம் குறைவாக இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.தொடர்ந்து பேசுகையில், 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது அதே தொகுதிகளை வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம். கூட்டணி குறித்து காலதாமதமின்றி விரைவில் அறிவிக்க வேண்டும்.சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்களை விஜயகாந்த் வெளியிடுவார், என்றார். சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி இருக்கும் சூழலில், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பிரேமலதா இவ்வாறு தெரிவித்திருப்பது அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி சிதற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.