பெங்களூரு: புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார். பெங்களூரு கோவிந்தராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய டிஜிட்டல் நூலகத்தை அமைச்சர் சோமண்ணா திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது: பணக்காரர்களிடம் பணம் இருப்பதால் புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். ஆனால் ஏழை, நடுத்தர மக்களுக்களின் படிப்பின் வசதிக்காக ஹைடெக் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நூலகம் என்பது அறிவு கோவில் போன்றது. அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்களை படிக்க வேண்டும். காலை முதல் மாலை வரை பல்வேறு பணிகள் இருக்கும். இதனுடன் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்க பழகிக்கொள்ள வேண்டும்.