காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கமானது, அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கமாகும். அதானி குழுமத்திற்கு சேவை செய்வதே தனது தலையாயக் கடன் என, துளியும் கூச்சமின்றி அதானிக்கு பணிவிடை ஆற்றிவரும் மோடியின் தலைமையிலான கார்ப்பரேட் அரசும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மோடியின் பொம்மலாட்ட அரசும் கூட்டுசேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன.

இத்திட்டத்திற்காக சட்டப்படியான சில சடங்குகளை செய்யும்வகையில், வரும் 22ம் தேதி பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தவுள்ளன. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அப்பகுதிவாழ் மீனவர்கள் மட்டுமின்றி, அனைத்து சமூக பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏறத்தாழ நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான அளவில் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க உள்ளனர். அத்துடன், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலையும் தூற்று விரிவுப்படுத்த உள்ளனர். இதனால், கடல்நீரானது நிலப்பகுதியில் உட்புகும் பேரிடர் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: