புகையில்லா போகி பண்டிகை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தல்

சென்னை: புகையில்லாமல் போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 18 ஆண்டுகளாக போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.  இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போகிப் பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: