லண்டன்: இங்கிலாந்தில் மீண்டும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கால்பந்தாட்டம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான விளையாட்டுகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதுவகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தையே அச்சமடைய செய்து வருகிறது. நேற்று மட்டும் 58,784 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அந்நாட்டில் மீண்டும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கால்பந்தாட்டம் உள்ளிட்ட தொழிற்முறை விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.