திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மே தின விடுமுறை ரத்து செய்வதா? வைகோ கடும் கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அண்ணா 1967ல் முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, மே 1ம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துப் பெருமை சேர்த்தார். அவரது மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பு ஏற்ற கலைஞர் மே நாள் விடுமுறை தொடர்வதற்கு உத்தரவிட்டார். 1990ம் ஆண்டு மே நாளின் நூறாவது ஆண்டு விழாவை, உலகம் முழுமையும், தொழிலாளர்கள் வெகு உற்சாகத்தோடு கொண்டாட ஏற்பாடுகள் செய்தனர்.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேரம் வேலை என்பதை பாஜ ஆட்சி நடத்தும் மாநிலங்களில் 12 மணி நேரமாக அதிகரித்து, ஆணை பிறப்பித்துள்ளது. ரயில்வே துறையில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இது வரையில் மே நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை ரத்து செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இதனை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2021 விடுமுறை நாள் பட்டியலில் மே நாளுக்கு பொது விடுமுறை நாள் உண்டு என, பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

Related Stories: