சென்னை: பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களை அழைத்து வந்து பாவை விழா போட்டியை நடத்த அறநிலையத்துறை கெடுபிடி காட்டி வருவதால் கோயில் அலுவலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபுதுங்கி நிற்கின்றனர். இளம் தலைமுறையினருக்கு ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பாவை விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு பள்ளி மாணவர்களை வைத்து திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்த அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதில், மார்கழி இசை திருவிழானை தற்போதுள்ள கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் ஆலோசனையை பெற்று பொறுப்புடன் நடத்திட சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பாவை விழா நடத்தி முடிக்கப்பட்ட விவரத்தினை புகைப்படத்துடன் அறிக்கையாக சமர்பிக்க அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.