திருவாடானை: திருவாடனை அருகே தண்ணீர் புகுந்ததால் 500 ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் பெரிய பாசன கண்மாய் உள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இக்கண்மாயின் பாசனத்திற்கு உட்பட்ட நிலங்களில் நெல்மணிகள் விளைச்சலுக்கு வந்துவிட்டன. இருப்பினும் கண்மாயில் தண்ணீர் அதிகமாக உள்ளது. கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஓரிக்கோட்டை, கீழக்கோட்டை, சேந்தனி, பாரதிநகர், செங்கமடை, அழகமடை, சானாவயல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் வயல்களில் புகுந்து வருகின்றன.