நீடாமங்கலம் பகுதியில் தொடர் அவலம்; மூட்டை மூட்டையாக பதுக்கி நூதன மணல் திருட்டு: லாரிகளில் மொத்தமாக ஏற்றி கொள்ளை லாபம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் கல்லணையிலிருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாற்றில், நகர நரசிங்கமங்கலம் பகுதியிலிருந்து இரவு நேரங்களில் மூட்டைகளை கட்டி மணல் கொள்ளையடித்து பதுக்கி வைத்து டிப்பர் மற்றும் லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெரிய வெண்ணாற்றில் பிரியும் பாமணியாற்றில் வெள்ளங்குழி, சித்தமல்லி, பரப்பனாமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், கோரையாற்றில் ஒரத்தூர், பெரியார்தெரு,

இடும்பன் கோயில் பகுதி, கோத்தமங்கலம், முல்லைவாசல், பெரம்பூர், கண்ணம்பாடி உள்ளிட்ட இடங்களிலும், வரதராஜபெருமாள் கட்டளை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், சிரிய வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, நடுப்படுகை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், வையகளத்தூர், அனுமந்தபுரம், ஒளிமதி, பழங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆறுகளில் தண்ணீர் இல்லாத இடங்களில் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான சிமெண்ட் சாக்குகளில் மணல்களை திருடி காக்குகளில் முட்டு போட்டு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் கொண்டு வந்து மூட்டைகளை ஏற்றி காட்டு பகுதிகளில் பதுக்கி வைக்கின்றனர்.

பின்னர் சேமித்து வைத்த மணல் மூட்டைகளை இரவு நேரங்களில் லாரியில் ஏற்றி லோடு ஒன்று ரூ. 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பதாக கூறப்படுகிறது. அதிலும் மணல் மூட்டை ஒன்று ரூ.40 முதல் 60 வரையும் விற்கப்படுவதாகவும.அதற்கு மேல் உள்ள வியாபாரி அதை வாங்கி ரூ.100 வரை விற்பதாக அவல நிலை ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் அதிகாரிகள் மாமுல் வாங்கி கொண்டு அவர்கள் ஆதரவோடும் மணல்கொள்ளை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சில இடங்களில் மாமுல் கொடுக்கவில்லை என்றால் கரையில் ஏற்றிய மணல் மூட்டைகளை கத்தி அல்லது பிளேடால் கிளித்து விடுகின்றனர்.

ஆறுகளில் மணல் கொள்ளை நடை பெறுவதால் ஆறுகள் குறுகி வாய்க்காலாக உருமாறி உள்ளதால் ஆறுகள் பள்ளமாகவும், பாசன வாய்க்கால்கள் மேட்டிலும் உள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வந்தாலும் தூர்வாரிய பாசன வாய்கால்களில் தண்ணீர் ஏரி செல்ல முடியாததால் முழுமையான விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: