நடப்பு கல்வி ஆண்டு பூஜ்ஜியம் இல்லை: 10, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் பொதுத்தேர்வு...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!!!

சென்னை: இந்த கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அம்மா மினி கிளினிக்கை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், நடப்பு கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பில்லை. 10, 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், விரைவில் அதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக கூறினார். அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு நோய் தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து மூடப்பட்டது. எனவே அதனையும் கருத்தில் கொண்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சூழலைப் பொறுத்து தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம், காவி நிறத்தில் இடம்பெற்றது தொடர்பாக பேராசிரியரிடம் விளக்கம் கேட்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: