மதுரை அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பாதிக்கும் அபாயம் ஆப்ரிக்கன் நத்தை படையெடுப்பால் அழியும் நெல், வாழை விவசாயம்

வாடிப்பட்டி: மதுரை அருகே ஆப்ரிக்கன் நத்தை படையெடுப்பால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள், வாழை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், நெல் மற்றும் வாழை விவசாயம் நடக்கிறது. தற்போது இப்பகுதியில் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த நத்தைகள் பெருமளவில் விவசாய பகுதிகளில் படையெடுக்க துவங்கியுள்ளன. ஆப்ரிக்க நாட்டில் உள்ள இந்த நத்தைகள் கேரளாவில் அதிகம் காணப்படும். தற்போது தமிழகத்திற்கு குறிப்பாக மதுரை மாவட்டத்தில் படையெடுப்பை துவங்கியுள்ளது.

பரவையில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு அதிகளவில் வரும் கேரள லாரிகள் மூலம் இப்பகுதியில் புகுந்துள்ள இம்மாதிரியான நத்தைகள் தண்ணீர் மற்றும் மண்ணுக்கு அடியில் தனது இனப்பெருக்கத்தை நடத்துகின்றன. பின்னர் வாழை மற்றும் நெற்பயிர்களை தாக்க துவங்குகின்றன. இவ்வகை நத்தைகள் இலைகளின் மீது ஒட்டிக் கொண்டு அதன் சத்துக்களை உறிஞ்சி எடுத்து விடுகின்றன. இதனால் வாழை மரத்தில் வாழைக்காய் பெருக்காமல் சுருங்கிவிடுகின்றன.     அதே போல் நெற்பயிர்கள் பால் பிடித்து வரும் நிலையில் நத்தைகள் அதன் சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து விடுவதால் வெகுவாக மகசூல் குறைத்து விடுகின்றன.  

இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இப்பகுதி விவசாயிகள், தற்காலிக நடவடிக்கையாக வரப்புகளில் கல் உப்புகளை தூவியும், பல்வேறு ரசாயன உரங்களை தெளித்தும் வருகின்றனர். இருப்பினும் நத்தைகளின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஆப்ரிக்க நத்தைகளின் ஆக்கிரமிப்பு அபாயம் உள்ளது. தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இதை கட்டுப்படுத்த விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு, மருந்துகளையும் அதற்குரிய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்கவும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Related Stories: