சிவகாசி: சிவகாசியில் நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவில், தோரணமாக தொங்கிய பலூன்களை கத்தரிக்கோலை கொண்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குத்தி உடைத்தது அதிகாரிகள், கட்சியினரிடம் கலகலப்பை ஏற்படுத்தியது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யனார் காலனியில் நேற்று மதியம் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரிப்பன் வெட்டி மினி கிளினிக்கை துவக்கி வைத்தார். அப்போது, நிலைப்பகுதியில் பலூன்களை அழகுக்காக கட்டி வைத்திருந்தனர். ரிப்பனை வெட்டித் துவக்கிய கத்தரிக்கோலை கையில் வைத்திருந்த அமைச்சர், திடீரென அங்கு தோரணமாக நிலைப்பகுதியில் தொங்கிய பலூன்களை ஒவ்வொன்றாக சிறு குழந்தைகள் விளையாடுவது போல, கத்தரிக்கோலை கொண்டு குத்திக் குத்தி உடைத்து விளையாடினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.