வாரணாசி: உத்தர பிரதேசத்தில், `பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனைக்கு’ என்று ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதி, பிரதமர் மோடி கடந்த 2014, 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் உள்ள பிரதமர் மோடியின் எம்பி அலுவலகம் விற்பனைக்கு வந்துள்ளதாக, ஓஎல்எக்ஸ். இணைய தளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இது பற்றி பெலுபூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக, எப்ஐஆர். பதிவு செய்த போலீசார் ஆன்லைனில் இந்த விளம்பரத்தை கொடுத்தது யார்? என்று களமிறங்கினர்.