சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின்போது யானை தாக்கி வனக்காவலர், தன்னார்வலர் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக் காலத்திற்குப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. 22ம் தேதி வரை 6 நாட்களுக்கு இப்பணி நடைபெறுகிறது. புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 10 வனச்சரகங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 350 பேர் குழுவாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட கல்லம்பாளையம் வனப்பகுதியில் மாயாற்றுக்கு தெற்குப் பகுதியில் வனக்காப்பாளர் பொன் கணேஷ் தலைமையில் வனக்காவலர் சதீஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவாக இந்த பணியில் ஈடுபட்டனர்.