தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வு தொடங்கியது: காலியாக உள்ள 10,906 காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை..!

சென்னை: தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வு தொடங்கியுள்ளது. காலியாக உள்ள 10,906 காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த ஆண்டு மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 ஆண்கள், 3,099 பெண்கள் மற்றும் சில திருநங்கையர் உள்ளிட்டோர் சிறப்பு காவல்படை பிரிவில் 6,545 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், சிறைத்துறைக்கு 119 பேரில் 112 ஆண்கள், 7 பெண்கள், தீயணைப்புத்துறைக்கு 458 ஆண்கள் என 10,906 பேர் 2-ம் நிலை போலீசார் தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்து வருகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 35 மையங்களில் 29,981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நேரம் காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணிவரை தேர்வு நடைபெறும். தேர்வு கண்காணிப்பு பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

கொரோனா காலம் என்பதால் தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், இல்லையென்றால் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை என்றும் சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: