அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த மங்களபுரம் குள்ளன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(29). பிரபல ரவுடி. நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் மீண்டும் நேற்று காலை வரையிலும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் சதீஷை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து சதீஷின் தாய் கலைச்செல்வி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் ரவுடி சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஐ.டி.ஐ பின்புறம் மது அருந்தி உள்ளார். அந்த இடத்தில் ரத்தம் சிதறி கிடக்கிறது. இதனையடுத்து, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதனால், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.