சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 10 பயணிகள் கைது

சென்னை: துபாயிலிருந்து இரண்டு விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 8 கோடி மதிப்புடைய, 12.5 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், இரண்டு பெண் பயணிகள் உள்பட 10 பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, சுங்கத்துறையினருடன் இணைந்து வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, துபாயிலிருந்து சென்னைக்கு தனியார் விமானத்தில் வந்த பயணிகளில் சந்தேகப்பட்டவர்களை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது இரண்டு பெண்கள் உள்பட 6 பயணிகளிடம் இருந்து, அவர்களுடைய உடமைகள், உள்ளாடைகள் போன்றவைகளில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்க பசைகள் ஆகியற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அன்றிரவு வந்த மற்றொரு பயணிகள் விமானத்தில் சுங்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் மேலும் 4 பயணிகளிடம் இருந்து தங்கம் மற்றும் தங்கப் பசை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் இரண்டு விமானங்களில் வந்த 10 பயணிகளிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புடைய 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 10 பயணிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, நேற்று வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் முகாமிட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

The post சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 10 பயணிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: