திருவனந்தபுரம்: கேரளாவில் தூதரகம் மூலமாக நடந்த தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா உள்பட முக்கிய குற்றவாளிகளுடன் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. சபாநாயகர் தங்கம் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுக்கு டாலர்கள் கடத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. கேரள மாநில பாஜ தலைவர் சுரேந்திரன் நேரடியாகவே சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மீது குற்றம்சாட்டினார். இந்நிலையில், சபாநாயகர் ராமகிருஷ்ணன் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், தங்கம் கடத்தல் கும்பலுடன் சபாநாயகர் ராமகிருஷ்ணன் ஒரு முறை கூட வெளிநாட்டுக்கு பயணம் செய்யவில்லை. சபாநாயகரையும், அவரது அலுவலகத்தையும் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புபடுத்துவது முறையல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.