சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, சிட்னியில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.40க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டியையும் சேர்த்து, தொடர்ந்து 3 வெற்றிகளை வசப்படுத்தி உள்ளதால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சிட்னியில் இன்று நடக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. ராகுல், தவான், கேப்டன் கோஹ்லி, ஷ்ரேயாஸ், சாம்சன், ஹர்திக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால் பேட்டிங் வரிசை மிக வலுவாக உள்ளது.