தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை உள்ளிட்டவற்றை இணைக்கும் ஆக்ரா மெட்ரோ ரயிலின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : ஆக்ரா மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.ஆக்ராவின் 15வது பட்டாலியன் பிஏசி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம்:

தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கும் பயனளிக்கும்.  வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவு போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இத்திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும். ஆக்ரா மெட்ரோ ரயில் முதல் கட்ட வழித்தடம் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஜாமா மசூதி உள்ளிட்டவற்றை இணைக்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ளது.அந்த வழித்தடத்தில் 6 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று மெட்ரோ நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைக்கப்படும்.

Related Stories: