சென்னை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக உயர்நிலை குழு, மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய பாஜ அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.