பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மின்வாரிய தலைவர் தொழிற்சங்கங்களுடன் நாளை சந்திப்பு

சென்னை: மின்வாரிய தலைவர் தொழிற்சங்கங்களை நாளை முதல் நான்கு கட்டங்களாக சந்திக்கிறார்.

தமிழக மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை, துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளை தனியார் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், கோரிக்கைகளை எடுத்துக் கூற வரும் அவர்களை மின்வாரிய தலைவர் சந்திப்பதில்லை எனவும் தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, மின்வாரியத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளும், அண்ணா சாலையில் உள்ள தலைமையகத்தில் திரண்டனர்.

அப்போது மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால் அங்கு இல்லாததால், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இணை மேலாண்மை இயக்குநர், மின்வாரிய தலைவர் தங்களை சந்திக்க ஒப்புதல் அளித்ததாக கூறிய பிறகே அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாளை (3ம் தேதி) முதல் வரும் 10ம் தேதி வரை நான்கு கட்டங்களாக  சந்திக்கிறார். சென்னை மின்வாரிய தலைமையகத்தில் நடைபெறும் சந்திப்புக்குப் பிறகு, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: