கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு விற்பனை தீவிரம்

கோவை: கோவையில் கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் திருகார்த்திகை நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். தீபத்தையொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிப்பு பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தனர். கோவை கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதியில் களிமண் மூலமாக அகல்விளக்கு தயாரிக்கும் பணிகள் நடந்தது. சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான விளக்குகளை மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், திருக்கார்த்திகை தீபம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து கோவையில் அகல்விளக்கு விற்பனை மும்மரமாக நடந்து வருகிறது. சிறிய அளவிலான 4 அகல் விளக்குகள் ரூ.10-க்கும், இலை வடிவிலான விளக்குகள் ஜோடி ரூ.10-க்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிர, வீடுகளின் வாசல்களில் தொங்கவிடும் வகையில் சிறிய அளவிலான விளக்குகள், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம் கொண்ட விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கை தீபத்திற்கு இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில் கவுண்டம்பாளையம், பூமார்க்கெட் பகுதிகளில் அகல் விளக்கு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: