கடத்தூர்: கடத்தூர் ஒன்றியம் கோத்துரெட்டிப்பட்டி ஊராட்சியில், சமீபத்தில் பெய்த மழையால் மயானத்துக்கு செல்லும் பாதை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் நேற்று சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் கோத்துரெட்டிப்பட்டி ஊராட்சி செங்கான் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல விவசாய நிலத்தை ஒட்டிய களிமண் சாலை வழியாக செல்ல வேண்டும். மழை காலத்தில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மேலும், பாதையின் இருபுறமும் மரம், செடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுவதால், கிராமத்தில் யாராவது இறக்கும்போது, சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.