சேலம்: தமிழகத்தை பெரிய அளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிவர் புயல், புதுச்சேரி பகுதியில் வலு இழந்து கரையை கடந்தது. இருப்பினும் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடும் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தெற்கு ரயில்வே பகுதியில் இயங்கும் 69 சிறப்பு ரயில்கள் முழுமையாகவும், 21 சிறப்பு ரயில்கள் ஒரு பகுதியாகவும் கடந்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. புயல் கரையை கடந்தவும், சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட புயல் பாதிப்பு பகுதிகளில் முழு அளவில் தண்டவாளம், சிக்னல், ரயில்வே பாலப்பகுதிகளை ஆய்வு நடத்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் உத்தரவிட்டார். இதன்பேரில், இரு கோட்டங்களிலும் புயல் பாதிப்பிற்கு உள்ளான இடங்களில் தீவிர கள ஆய்வில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.