பெண்களை பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம், மரண தண்டனை: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில், பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை, ஆண்மை நீக்கம் செய்வதற்கான திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக தகவல் துறை அமைச்சர் ஷிப்லி பராஸ் கூறுகையில், பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான (புலனாய்வு மற்றும் விசாரணை) மசோதா 2020, பாகிஸ்தான் குற்றவியல் தண்டனை திருத்த மசோதா 2020 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் இந்த வாரத்தில் இறுதி செய்யப்பட உள்ளன,’’ என்றார்.

இந்த மசோதாக்களில் பாலியல் மற்றும் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆண்மை நீக்கம், மரண தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் மூன்றாம் பாலினத்தவர், கூட்டு பாலியல் பலாத்காரம் ஆகியவை முதல் முறையாக பாலியல் குற்றங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: