சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கட்டணத்தை இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை திரும்ப பெறலாம் என்று இபிஎஸ், ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் உள்ளாட்சி பதவிகளுக்கு கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி கட்சி தொண்டர்களிடம் கடந்த 2019 நவம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறாத காரணத்தால் போட்டியிட, கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்தவர்கள், கட்டணத்தை திரும்பப்பெறலாம் என்று அறிவிப்பு வெளியிட்டதன் பேரில் பலர் விண்ணப்ப கட்டணத்தை பெற்றுச்சென்றுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்து, கட்டணத்தை திரும்ப பெறாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கிடும் வகையில், இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படமாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.