கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.ஆர்க்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வருகின்றன. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகள் இங்கு தங்கி பின் சொந்த நாடுகளுக்கே திரும்பி செல்வது வழக்கம். இதில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கும்.

கொசு உள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி), உள்ளான் வகை பறவைகள் என 247 வகை பறவைகளும் வந்து செல்கின்றன. தற்போது, 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200 நீர்ப்பறவைகளும் வந்துள்ளது.

இப்படி வந்து செல்லும் பறவைகளில் உள்ளான் வகையான ஆலா மற்றும் கிரீன்சான்ங், சாங்க் பிளவர் உள்ளிட்ட ஆறு வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும். மற்ற அனைத்து பறவைகளும் சீசன் காலத்தில் தங்கி மட்டுமே செல்லும். சைபீரியாவிலிருந்து இங்கு வருகை தரும் ஆலா பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சி பொரித்தவுடன் முதலாவதாக குஞ்சு பறவை தன்னுடைய சொந்த நாட்டிற்கு இயற்கையின் உள்தூண்டுதலால் முதலில் செல்லும். தற்போது கொரோனா பரவலின் காரணமாக பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு தடைவிதித்துள்ளது. தடைநீங்கிய பின் பறவையின் அழகை கண்டுகளிக்கலாம்.

Related Stories: