புதுடெல்லி: மும்பை தாக்குதலின் நினைவாக, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்த இருந்த மிகப் பெரிய தாக்குதலை முறியடித்து, பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் நக்ரோடா பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சம்பா பகுதியில் இருந்து வந்த லாரியை பான் சுங்க சாவடி அருகே சோதனையிட முயன்றனர். அப்போது, லாரியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவத்தினரும் உடனடியாக, லாரியை சுற்றி வளைத்து பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் 4 மணி நேரம் நடந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மும்பை தாக்குதல் நினைவு தினமான வரும் 26ம் தேதி மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ளது.