பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை அரசு அறிவிப்பு.. பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து சம்பளம் பெற்றதால் நடவடிக்கை

கொழும்பு : இலங்கையில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து சம்பளம் பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இலங்கையில் பிச்சையெடுப்பது ஒரு தொழிலாக இருக்கிறது என்ற அதிரவைக்கும் உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான பிச்சைக்காரர்களே கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருக்கிறது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலானோர் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலங்கையின் போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சிக்னல் பகுதியில் பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிக்னல் பகுதியில் பொருள் விற்பவர்களிடம் இருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பொருட்கள் வாங்கக் கூடாது.

மீறி வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் குறித்து சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் பிரதான நகரங்களிலும், சிக்னல் பகுதியிலும் பிச்சை எடுப்பதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: