கொழும்பு : இலங்கையில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து சம்பளம் பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இலங்கையில் பிச்சையெடுப்பது ஒரு தொழிலாக இருக்கிறது என்ற அதிரவைக்கும் உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான பிச்சைக்காரர்களே கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருக்கிறது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலானோர் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலங்கையின் போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா தெரிவித்துள்ளார்.