மதுரை: மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உட்பட 6 மாவட்ட நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பகல் முழுவதும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமரி கடலில் நிரவும் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே தொடர்ச்சியாக மழை கொட்டி வருகிறது. நேற்று மதியம் முதலே திடீரென கரும் மேகங்கள் ஒன்று திரண்டன. மாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் மற்றும் வண்டியூர், அண்ணாநகர், பெரியார் பஸ் ஸ்டாண்ட், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, புதூர், பழங்காநத்தம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் ஸ்டாண்ட், மாசி வீதிகளில் தண்ணீர், குளம் போல் தேங்கியது. தண்ணீர் செல்ல முடியாததால் போக்குவரத்து முடங்கியது.