விருதுநகர்: விருதுநகர் அருகே அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் சேதமடைந்தன. விருதுநகர் அருகே எம்.அழகாபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மின்கசிவு ஏற்பட்டது. பின்னர் தீப்பொறி கிளம்பி அறையில் இருந்த பழைய அட்டை பெட்டிகளில் தீப்பிடித்தது. தொடர்ந்து மருந்து சேமித்து வைத்திருந்த அறைக்கும் தீ வேகமாக பரவியது. தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அறை முழுவதும் கரும்புகை பரவியதில் மருந்து, மாத்திரைகள் சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்திற்கும் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது சுகாதாரத்துறை சிறப்பு பணிகள் இயக்குநர் சித்ரா ஆய்வு செய்தார்.